“எலே” = குரங்குகளின் மொழி

தாமிரபரணி தாலாட்டி மூழ்கும்
குறுக்குத் துறை முருகன்

“எலே”, வாலே, அங்கிட்டு என்னலே ஆட்டம்?
= இது தென்பாண்டித் தமிழ்!
= தென்பாண்டித் தமிழச்சியான கோதையும், “எல்லே இளங்கிளியே” -ன்னு இலக்கியம் ஆக்குறா, நாட்டுப்புற மொழியை!

அத்தனை சிறப்பு மிக்க “எலே”
அதை எப்படி-ல்லே “குரங்கு மொழி”-ன்னு சொல்லுற? எடுல்லே அருவாள:)

சேச்சே, குரங்குகளும், “எலே” சொல்லுது -ன்னு சொல்ல வந்தேன், சங்கத் தமிழில்!
பதினெண் கீழ்க் கணக்கில் ஒரு நூல் = திணைமொழி ஐம்பது; அதுல வருது; பார்க்கலாமா?


பலவின் பழம் பெற்ற பைங் கண் கடுவன்,
எல!’ என்று இணை பயிரும் ஏகல் சூழ் வெற்பன்
புலவும்கொல் தோழி? புணர்வு அறிந்து, அன்னை
செலவும் கடிந்தாள், புனத்து

திணை: குறிஞ்சி
துறை: வரைவு கடாதல் (கண்ணாலத்துக்கு அவசரப்படுதல்)
நூல்: திணைமொழி ஐம்பது
கவிஞர்: கண்ணம் பூதனார்

சூழல்:
காதல் வீட்டுக்குத் தெரிஞ்சி போச்சி; முன்பு போல், இரவில் குளிர் காயும் போது, நைசா ஒதுங்கி, புறத்தே காத்திருக்கும் அவனைத் தழுவ முடியலை = இரவுக் குறி!
பகலில், தினைப் புனத்திலும் பலத்த காவல், சந்திக்க முடியலை = பகற் குறி!
சீக்கிரம் கண்ணாலம் கட்டிக்கோ, இந்த அவதி வேணாம் -ன்னு தோழி giving advice to தலைவன்!


காபி உறிஞ்சல்:

பலவின் பழம் பெற்ற பைங் கண் கடுவன்

கடுவன் = ஆண் குரங்கு; மந்தி = பெண் குரங்கு
பலாப் பழம் பறிச்சிட்டு வருது பசி மிக்க கடுவன்…

‘எல!’ என்று இணை பயிரும் ஏகல் சூழ் வெற்பன்

பசியிலும், “எல” ன்னு கூப்புடுது பெண் குரங்கை!
எலே, இங்க வாடி, சேர்ந்து தின்னுவோம் -ன்னு விளிப்பு:)

பலாப் பழம் ரொம்ப எடையுள்ளது; அதைக் குரங்கு தூக்க முடியாம தூக்கிட்டு வருது
= காதலுள்ள காமமும் அப்படியே!:)
நுனிக் கொம்பில் அத்தனாம் பெரிய பழம், அறுந்து விழாம, ஆனாத் தொங்கும் கலை!

இப்படி, “எல” ன்னு பசியிலும் ஆசையோடு விளிக்கும் ஆண் குரங்கு வாழ் மலைத் தலைவா!
ஏகல் = உயர்வு!
ஏகல் சூழ் வெற்பு = உயர்வு சூழ் மலை! குறிஞ்சி நிலம்;

புலவும்கொல்-தோழி?

என் கிட்டக்க அவன் கோச்சிக்கிட்டானா? கோச்சிக்கிட்டானா? -ன்னு தினமும் என்னைக் கேக்குறா டா!
புலத்தல் = மென் கோபம்; திருக்குறளில் = புலவி நுணுக்கம், பின்பு கலவி நுணுக்கம்:)

புணர்வு அறிந்து, அன்னை
செலவும் கடிந்தாள், புனத்து

உங்க ரெண்டு பேரு புணர்வு அம்மாக்குத் தெரிஞ்சி போச்! அன்னை செலவும் கடிந்தாள், புனத்துக்கு!
அதான் அவளால வர முடியல! கோச்சிக்கிட்டானா கோச்சிக்கிட்டானா? -ன்னு புலம்புறா!
(இப்படி என் உயிரை எடுப்பதுக்கு, பேசாம சீக்கிரம் கண்ணாலம் கட்டிக்கோயேன்),
மலை நாட்டுத் தலைவா, எலே, காதுல விழுதா-ல்லே? ஒன்னைத் தான்-ல்லே! சொல்லுலே!

ஒருகா, இந்த “எலே” தான், chinese மக்கள் கிட்ட, what la? yes la -ன்னு ஆயீருச்சோ?:)

dosa 89/365

Comments
4 Responses to ““எலே” = குரங்குகளின் மொழி”
  1. நல்ல விளக்கம்… ரசித்தேன்… நன்றி…

    Like

  2. amas32 says:

    டார்வின் தியரி படி குரங்கில் இருந்து தான் மனிதன் தோன்றினான். மனிதனின் இயல்பை குரங்கில் இங்கே காண்கிறோம். சிரமப்பட்டுப் பலாப் பழத்தைத் தூக்கி வரும் ஆண் குரங்கு அதை பெண் குரங்கைக் கூப்பிட்டு பகிர்ந்து உண்ணுகிறது. இங்கே விலங்கிற்கும் உள்ள காதல் இந்த செயல் மூலம் நிருபிக்கப் படுகிறது.

    Though it talks about the girl pining for her lover the song somehow sounds light and breezy!

    பெண்ணை பெயர் சொல்லிக் கூப்பிடாமல், அது என்ன எலே? பதில் வேண்டும் :-)

    amas32

    Like

  3. விளக்கம் புதுமை. என் மொழி:- தமிலு.
    ஒரு குரங்கின் கதய்யய்ப் பார்க்கலாமா?
    ————————————————————————–
    குரங்குக் குட்டியின் கூத்து
    ‘ஆடு மகல் னடந்த கயிட்ரு மந்தி ஏரி (னடந்திட),
    (சிரார்) தாலம் கொட்டும் ‘ — னட்ரினய்ப் பாடல் 95.
    உயரத்தே உருதியான கயிரு ஒன்ரய்க் கட்டி, அதன் மேலே வித்தய்யில் சிரந்த மகலிர் ஒருவர் ஏரினின்ரு ஆட்டம் ஆடி. அவர் ஆடி முடித்துப் போனதும், அங்கு வந்த குரங்கு குட்டி, கயிட்ரு மேல் ஏரிட்டு. கயிட்ரு மேல் னேராக னிர்க்க இயலாத குரங்குக் குட்டி, அப்படியும் இப்படியும் அசய்ந்து அசய்ந்து னடந்திட்டு. அதய்க் கன்ட சிரார் கூட்டம், கய் கொட்டி தாலம் இட்டு மகில்ந்திட்டு. இந்தக் காட்சியய்க் கன்ட புலவர் ஒருவர், ‘ஆடு மகல் னடந்த கயிட்ரு மந்தி ஏரி (னடந்திட), (சிரார்) தாலம் கொட்டும்’ என்ரு வெலிப்படுத்தலாயினார்.
    ——————————————————————————————
    கருத்து: தலய்மய் ஏர்ப்பவர், வித்தகராய் இருத்தல் னன்ரு.
    ——————————————————————————————

    Like

    • நன்றி வெற்றிச் செழியன்
      என்ன தமிழ் எழுதியைப் பயன்படுத்துகிறீர்கள்? சற்று பல எழுத்துப் பிழைகள், எனினும் தங்கள் பின்னூட்டம் மிகவும் நன்று!
      சிறார்களைப் போலவே, நாமும் தாலம் கொட்டி மகிழ்வோம் மந்தியை:)

      Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)