சிலுக்கு = குற்றியலுகரமா?
பல பேரு, சின்ன வயசில் படிச்சிருப்போம்! ஒடனே மறந்தும் இருப்போம்!
கழுத்து அறுக்குறானுங்கடா; குற்றிய-லுகரமாம்!:) = என்னத்த குற்றணும்?
குற்றமுள்ள நெஞ்சுக்குக் குற்றியலுகரம் -ன்னு நானே பேசி இருக்கேன்:))
ஆனா அப்போ, Prof. தொல்காப்பியர் (எ) செம Interesting Party பத்தித் தெரியாது;
அவரு எம்புட்டு எளிமையாக், கிண்டலாச் சொல்லிக் குடுக்குறாரு; பார்க்கலாமா இன்னிக்கி?
ஒரு கதையைப் பாத்துருவோம்!
சென்னை கிறித்துவக் கல்லூரி;
பேராசிரியர் (Professor) = பரிதி மாற் கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி)
ஒரு சின்ன பையன், விரிவுரையாளர் (Lecturer) வேலை தேடிக்கிட்டு வரான்;
அவன் பேரு: வேதாசலம் (பின்னாளில் மறைமலை அடிகள்)
Interview Question: குற்றியலுகரம்-முற்றியலுகரம்: வேறுபாடு என்ன?
பையன் சொன்ன பதில்: “எனக்குத் தெரியாது”
பேராசிரியருக்கு மிக்க மகிழ்ச்சி; நன்று நன்று; வேலையும் குடுத்துட்டாரு!
அட, “தெரியாது”-ன்னு சொன்னவனுக்கு வேலையா?
தமிழ் உருப்பட்டாப் போலத் தான்? -ன்னு நினைக்கிறீங்களா?:) = மெய்யாலுமே, தமிழ் உருப்பட்டது!
அந்த ஆசிரியர்-மாணவரால் தான்…
தனித்தமிழ் இயக்கம் தோன்றி, தமிழே உருப்பட்டது!
வடசொல் கலந்துக் கலந்து எழுதித், தமிழைச் சிதைக்கும் பழக்கம் குறைந்தது!
உபாத்தியாயர் = ஆசிரியர் ஆனார்:)
“எனக்குத் தெரியாது”
* எனக்கு (க்+உ) = குற்றியலுகரம்
* தெரியாது (த்+உ) = முற்றியலுகரம்
நூல்: தொல்காப்பியம்
(எழுத்து அதிகாரம்: குற்றியலுகரப் புணரியல் 407)
கவிஞர்: தொல்காப்பியர்
ஈர்-எழுத்து ஒருமொழி, உயிர்த் தொடர், இடைத் தொடர்,
ஆய்தத் தொடர் மொழி, வன்றொடர், மென்றொடர்,
ஆயிரு மூன்றே – உகரம் குறுகு இடன்;
காபி உறிஞ்சல்:
ஓர் எழுத்தை ஒலிக்க (உச்சரிக்க) எடுத்துக் கொள்ளும் கால அளவு
= மாத்திரை -ன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்; (மாத்திரை = கண் இமைக்கும் நேரம்)
* உ (என்கிற) குறிலுக்கு = ஒரு மாத்திரை!
ஆனா, எல்லா நேரமும், “உ” வை, ஒரு மாத்திரையிலேயே சொல்லுறோமா? இல்லை; அதை விடக் கம்மியாவும் சொல்லுறோம்!
உ, ஊ -ன்னு தனியாச் சொல்லும் போது, “உ”-ன்னு வாயைக் குவிப்போம்-ல்ல? ஆனா சிலுக்”கு” -ன்னு சொல்லும் போது, வாயைக் குவிப்போமா?:)
“உ-யிரே சிலுக்-கு“;
மூனு தபா, வாய் விட்டுச் சொல்லிப் பாருங்க; பக்கத்துல யாரும் இல்லாத போது:))
* உ-யிரே = ஆரம்ப “உ” – அதை முழுக்க ஒலிக்கறோம்;
* சிலுக்-கு = ஆனா, முடியற “உ”; குவிக்காமச் சொல்லுறோம்;
டேய்ய் ர”கு” / “உ”ன்னைய ஒதைப்பேன் = எதுல “உ” கம்மியா ஒலிக்குது?
குறுகி ஒலிச்சா = குறு + இயல் + உகரம் = குற்றியலுகரம்!
ஒரு மாத்திரை, அரை மாத்திரையாக் குறுகி ஒலிக்கும்! எங்கெங்கே? = நம்ம தொல் List போடுறாரு!:)
ஆ இரு மூன்றே
= இரு x மூன்று = 6 இடங்களில், உகரம் குறுகும்
1) ஈர்-எழுத்து ஒருமொழி = ஆறு, பாகு, நாடு | (ஈரெழுத்து நெடில்; அதன் பின்னாடி வரும் “உ”)
2) உயிர்த் தொடர் = வரகு, சிறகு | (நெடில் இல்லா உயிர் எழுத்து; ர = ர் + அ; பின்னால் வரும் “உ”)
3) இடைத் தொடர் = மார்பு, மூழ்கு | (இடையினம் – யரலவழள)
4) ஆய்தத் தொடர் மொழி = அஃது, இஃது
5) வன்றொடர் = பத்து, குத்து | (வல்லினம் – கசடதபற)
6) மென்றொடர் = சங்கு, முங்கு | (மெல்லினம் – ஙஞணநமன)
மார்பு = குற்றியலுகரம்;
ஆனா ஓய்வு = ? அல்ல! ஏன்?
நல்லாக் கவனிங்க: கசடதபற-ன்னு முடியும் “உ”க்கள் மட்டுமே
(கிண்டல் பண்ணாலும் okay:) But this is the memory tip = குசுடு துபுறு -ன்னு முடியணும்)
* மார்பு = பு -ன்னு முடியுது;
* ஓய்வு = வு -ன்னு முடியது; வல்லினத்தில் முடியலை!
So, மார்பு = குற்றியலுகரம்; ஓய்வு = முற்றியலுகரம்
அதே போல:
பாக்கு = குற்றியலுகரம்; பல்லு = முற்றியலுகரம்
One more:
நாடு = குற்றியலுகரம் ; நடு = முற்றியலுகரம்
யோவ், அதான் டு-ல முடியுதே; குசுடு துபுறு; அப்பறம் என்னவாம்?:)
அண்ணே, குசுடு துபுறு -வில் முடிஞ்சா மட்டும் போதாது;
மேற்சொன்ன 6 வகையில் ஒன்னாவும் இருக்கோணும்!
நாடு = ஈரெழுத்து நெடில், so okay! ஆனா நடு = குறில்; so itz not குற்றியலுகரம்:)
தொல்காப்பியர் சொன்ன 6 points,
Formula போட்டா, Easy-aa மனசலாயி:)
1) குசுடு துபுறு -ன்னு முடியணும் (வல்லின “உ”க்கள்)
2) மூக்-கு/ முங்-கு/ மூழ்-கு = வல்லினம்/மெல்லினம்/இடையினம் = மூனுமே வரலாம்;
3) அஃ-து = ஆய்தம் வரலாம்
4) நா-டு = ஈரெழுத்தா வந்தா நெடிலாத் தான் வரணும்; குறில் கூடாது
5) நாயு-டு/ நம்பி-டு = உயிரெழுத்தும் வரலாம்; ஆனா, குறிலா வரணும் (நாயு = ய்+உ, நம்பி = ப்+இ)
1) என் அபிமான “சிலுக்கு”
= குற்றியலுகரமா? முற்றியலுகரமா?:)
2) கோடிட்டவற்றுள், குற்றியலுகரங்களை மட்டும் தனியே காட்டுக:
மாங்குயிலே பூங்குயிலே, சேதி ஒண்ணு கேளு!
…
தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச, வெங்கலத்துச் செம்பு – அதைத்
தொட்டு எடுத்து, தலையில் வெச்சா, பொங்குதடி தெம்பு
—
முத்தையன் படிக்கும் முத்திரைக் கவிக்கு
நிச்சயம் பதிலு, சொல்லணும் மயிலு
மாங்குயிலே பூங்குயிலே, சேதி ஒண்ணு கேளு!
dosa 70/365
“எனக்குத் தெரியாது”
* எனக்கு (க்+உ) = குற்றியலுகரம்
* தெரியாது (த்+உ) = முற்றியலுகரம்
தம்பி, நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். இனிப்புத் தடவிய இலக்கணம் – உண்ணும்போது சுவையாக இருக்கும்.
இங்கு ‘தெரியாது’ என்பதுதான் கு.உ
எனக்கு என்பதுவும்தான். ஆனால் இங்கு வருவது ‘எனக்குத்’. கு-வுக்கு அடுத்து ஒற்று (த்) வருவதால் அந்த ‘கு’ கு.உ அல்ல. எனவே இது மு.உ.
பாராட்டுக்கள்.
முனைவர்.ப.பாண்டியராஜா
LikeLike
வணக்கம் முனைவரே!
தங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி!
ஆமா, “எனக்குத்” -இல் த் வந்துறுது!
அதான் எனக்கு/தெரியாது -ன்னு ரெண்டாப் பிரிச்சி எழுதினேன், சும்மாக் கதை சொல்வதற்காக:)
ஒரேயொரு ஐயம், சரி பார்க்க முடியுமா?
தெரியாது = குற்றியலுகரம் அல்ல -ன்னு நினைக்கிறேன், இன்னொரு தமிழாசானும் அப்படியே சொல்கிறார்;
ஏனென்றால், வெறுமனே “யாது” -ன்னு வந்திருந்தா நெடிற் தொடர்க் குற்றியலுகரம் ஆகி இருக்கும்!
உயிர்த் தொடர் குற்றியலுகரம் -ன்னும் சொல்ல முடியாது; ஏன்னா அதில் குறில் மட்டுமே (பெருகு, வரகு)
http://www.tamilvu.org/courses/degree/c021/c0211/html/c0211405.htm
கொஞ்சம், சரி பார்த்துச் சொல்ல முடியுமா? நன்றி!
LikeLike
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்பது குற்றியலுகர வகைகளுள் ஒன்று. அழகு, அரசு, பண்பாடு, உனது, உருபு, பாலாறு போன்ற சொற்களில் வல்லின மெய்களை ஊர்ந்து வந்த உகரம்(கு, சு, டு, து, பு, று) உயிரெழுத்தைத் தொடர்ந்து (ழ்+அ=ழ, ர்+அ=ர, ப்+ஆ=பா, ன்+அ=ன, ர்+உ=ரு. ல்+ஆ=லா) ஈற்றில் குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு உயிரெழுத்தைத் தொடர்ந்து வருவது உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாகும்.
நன்றி – விக்கிப்பீடியா
கவனிக்கவும்: பண்பாடு, பாலாறு போன்றவை உயிர்த்தொடர் கு.உ முடியாது என்பதுவும் இதில் அடங்கும் (என நினைக்கிறேன்) தங்கள் தமிழாசானைக் கேட்டுச் சொல்லுங்கள். நான் தமிழ் ஆர்வலன் மட்டுமே.
அன்புடன்,
ப.பாண்டியராஜா
LikeLike
முனைவர் ஐயா,
Gud Morning! தூங்கி எழுந்ததும் எனக்கொரு யோசனை:)
பாலாறு பாருங்க! பால் + ஆறு; ஆறு = நெடில் தொடர்க் குற்றியலுகரம்
பால் அப்பறமா வந்துச் சேருது! அதே போல் பண்+பாடு!
எதுக்குச் சொல்லுறேன்-ன்னா…
உயிர்த்தொடர் குற்றியலுகரத்தில், குறில்களே வருவதாகச் சொல்லி இருக்காங்க, தமிழ் இணையப் பல்கலையிலும்!
(From tamilvu.org
உயிர் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
நெடில் எழுத்துகள், நெடில் தொடர்க் குற்றியலுகரத்தில் இடம் பெற்றதால்
உயிர்மெய் எழுத்துகளில் உள்ள குறில் எழுத்துகள் மட்டும் உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தில் வரும்.
எனவே, இது, “குறில்தொடர்க் குற்றியலுகரம்” என்றும் அழைக்கப்படும்.
உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தில் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் மட்டுமே வரும்.
எ.டு : வரகு, தவிசு, முரடு, வயது, கிணறு)
LikeLike
OK, விடமாட்டீர்கள் போல் தெரிகிறது! நல்ல மாணவன்! இப்பொழுது தொல்காப்பியத்தைத் தூண்டித் துருவ வேண்டும். அதற்கு இப்போது வசதி இல்லை. வெளிநாட்டில் இருக்கிறேன். ஊர் திரும்ப 11 நட்கள் உள்ளன. திரும்பியதும் இதை நோண்டிக்கொண்டிருக்க முடியாது. +7 நாட்கள் தாருங்கள். internet -இல் தேடிக்கொண்டிருக்க பொறுமை இல்லை.
இப்பொழுது இன்னொரு lOgic தோன்றுகிறது. கேள்வி: What is the difference between கு.உ and மு.உ? பதில்: ‘எனக்குத் தெரியாது’. இதைச் சொல்லிப் பாருங்கள். (செந்தமிழும் நாப்பழக்கம்) ‘எனக்குத்’ – என்னும்போது த்-ஐ அழுத்தி உச்சரிக்க என் அப்பா மண்டையில் கொட்டி சொல்லித் தந்திருக்கிறார். அப்படிச் சொல்லும்போது கு-வில் உள்ள உகரம் தூக்கலாக இல்லையா? அது எப்படி கு.உ ஆகும்? பெங்களூரு, மங்களூரு போன்றா ‘தெரியாது’ என்கிறோம். தெரியாத் +(ஒரு சிறிய உ) Sujatha பாணியில் து-வுக்கு font size சிறிதாக்கவேண்டும். எனவே, ஒரு empirical formula – ஆக எனக்குச் சரி எனத் தோன்றுகிறது. எனினும் Professor Emeritus thols. என்ன சொல்கிறார் என, சென்னை சென்ற பின்னர்தான் தெரியும்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா
LikeLike
No issues sir! மெல்ல பாத்துக்கிடலாம்! தங்கள் பயணம் இன்பமாய் அமைய வாழ்த்துக்கள்:)
LikeLike
தெரியாது – உயிர்த்தொடர் குற்றியலுகரம்
ஈற்றுக்கு முன் உயிர்மெய் குறில் / உயிர்மெய் நெடில் வந்தால் உயிர்த்தொடர் குற்றியலுகரமாகும்.
LikeLike
உங்களுக்கு சிலுக்கு இல்லா படமும் படமும் இல்லை, சிலுக்கு இல்லா பாடமும் பாடம் இல்லை! :-)
சிலுக்கு – குற்றியலுகரம்
தொட்டு – குற்றியலுகரம்
செம்பு – குற்றியலுகரம்
எடுத்து – குற்றியலுகரம்
தெம்பு – குற்றியலுகரம்
கவிக்கு – குற்றியலுகரம்
amas32
LikeLike
100/100
Super-ma:)
கேளு, மயிலு = இவை ஏன் குற்றியலுகரம் இல்லை-ன்னும் வாசகர்களுக்குத் தெளிவுபடுத்திருங்க!
சிலுக்கு = குற்றியலுகரமே! அவுங்க கண்ணே குறுகித் தான் ஒலிக்கும்:))
LikeLike
முதலில் அதை எழுதிவிட்டு அழித்தேன், ஏனென்றால் உங்கள் கேள்வி படி பதில் அளிக்க வேண்டும் என்று :-)
கேளு, மயிலு இரண்டும் குற்றியலுகரம் ரூல்ஸ் படி வரலை :-) இடையினத்தில் முடிகிறது. அதனால் முற்றியலுகரம்?
amas32
LikeLike
“வடசொல் கலந்து எழுதித், தமிழைச் சிதைக்கும் பழக்கம்”
தமிழ், சம்ஸ்க்ருதம் இரண்டும் எனக்குப் பிடித்தவை என்பதால், இந்த வாக்கியம் சற்றே உறுத்துகிறது.
சம்ஸ்ருதம் கலவாத தூய தமிழில் எழுதினார்கள் என்று சொல்லுங்கள், சரி. மணிப்ரவாளம் என்ற நடை நீக்கித் தமிழை எளிமையாக்கினார்கள் என்று கூறுங்கள், சரி. ஆனால் இங்கு சிதைத்தல் என்ற சொல்லை ஒப்புக் கொள்ள முடியவில்லை. :-(
LikeLike
//தமிழ், சம்ஸ்க்ருதம் இரண்டும் எனக்குப் பிடித்தவை என்பதால், இந்த வாக்கியம் சற்றே உறுத்துகிறது.
எங்களுக்கும் தமிழும் சமஸ்கிருதமும் பிடிக்கும் – இரண்டும் தனித்தனியே இருந்தால் !!
ப.பாண்டியராஜா
LikeLike
உறுத்தலாக இருப்பின், என்னை முதலில் மன்னிக்கவும் கருணாகரன்!
———————-
வடமொழி சிறப்பான/செறிவான மொழி; ஓரளவு அறிவேன்!
இருப்பினும், சிதைவைச், சிதைவு -ன்னு சொல்லாமல், எப்படிச் சொல்லுறது -ன்னு தான் தெரியல:)
ஒரு சின்ன எடுத்துக்காட்டு சொல்லுறேன், உங்கள் கருத்துக்களை மதிப்பவன் என்ற முறையில்…
தமிழ் இலக்கணத்தில் ஒன்றை மட்டும் உருவகித்து, இன்னொன்றை உருவகியாது விட்டு விடுதல் உண்டு!
= ஒரு புடை உருவகம்
இப்படிச் சொன்னா, இன்னிக்கி பலருக்கும் தெரியாது; “ஏகதேச” உருவகம் ன்னாத் தான் தெரியும்!:(
சாதாரணப் பயன்பாட்டில் சில சொற்கள் கலப்பது இயற்கையே!
ஆனா, இலக்கணத்திலேயே புகுத்தினா எப்படி? “ஒருபுடை” சிதைந்து விட்டது அல்லவா?
பாழ்=பூஜ்ஜியம், சோறு=சாதம், இதழ்=பத்திரிக்கை, பொருள்=அர்த்தம்
பண்பாடு=கலாச்சாரம், முகவரி=விலாசம், எடுத்துக்காட்டு=உதாரணம்
பல சொற்கள், தமிழை விட்டுக் காணாமலேயே போய் விட்டன:( இதைத் தான் “சிதைவு” -ன்னு குறிப்பிட்டேன்!
———————-
இதை, வடமொழி (எ) செம்மொழி செய்யலை; அது நல்ல மொழி தான்;
அதைச் சார்ந்தவர்கள்/ அந்த மொழியாளர்கள் செய்த கொடுமையே இவை!:(
எனக்கும் வடமொழி மிகவும் பிடிக்கும்!
அது, அதன் இடத்தில் இருந்து கொண்டு, ஓகோ-ன்னு வரட்டும்; தமிழில் ஊடாடுவது மட்டுமே தவறு!
நானாச்சும் வெறுமனே “சிதைவு” ன்னு தான் சொன்னேன்,
ஆனா வள்ளலார்/மறைமலை சொன்னதையெல்லாம் படிச்சா, ரொம்பக் கோவமே வந்துரும் போல இருக்கே!:))
It was a casual remark, when talking abt maRaimalai adigaL
ஒவ்வொருத்தர் பிடித்தமும் பாத்துப் பாத்து, ஒவ்வொரு சொல்லாச் செதுக்கிச் செதுக்கி நான் எழுத முடியுமா?:))
Hope u understand & forgive me!:)
பக்தாம்ருதம் – விஸ்வ ஜனானு மோதனம்
சர்வார்த்ததம் – ஸ்ரீ சடகோப வாங்கமயம்
சஹஸ்ர சாகோ உபநிஷத் சமாம்யஹம்
நமாம்யஹம் “திராவிட வேத” சாகரம்!
செய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!
(ஆழ்வார் ஈரத்தமிழ் குறித்து வேதாந்த தேசிகர்)
LikeLike
விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.
// உறுத்தலாக இருப்பின், என்னை முதலில் மன்னிக்கவும் கருணாகரன்!
இங்கு மன்னிப்பு, forgive என்ற சொற்களுக்கே இடமில்லை, (உங்களை எப்படி அழைப்பது? கண்ணபிரான்? ரவி? சங்கர்?). மாற்றுக் கருத்து உடையவர்கள் அனைவரிடமும் நாம் மன்னிப்புக் கேட்பது என்று ஏற்பட்டால் பிறகு என்னாவது? எனக்கு உறுத்தியது என்றால் அதற்கு நீங்கள் ஏன் மன்னிப்புக் கேட்கவேண்டும்?
நீங்கள் கூறிய அனைத்துக் கருத்துக்களும் எனக்கு ஏற்புடையவையே. தமிழ் மீது கொண்ட காதல் பிறமொழிகளின் மீது வெறுப்பாக மாறக்கூடாது என்பதே என் எண்ணம். (தங்களைக் குறிப்பிடவில்லை. இங்கும் சரி, மற்ற வலைப்பக்கங்களிலும் சரி, உங்களுடைய பல பதிவுகளையும் உரையாடல்களையும் படித்து இருக்கிறேன். தமிழிலிருந்து மட்டுமன்றி சம்ஸ்க்ருத நூல்களிலிருந்தும் மேற்கோள் காட்டியதை ரசித்திருக்கிறேன்.) பல மேடைகளில் தமிழ்க் காதல் சம்ஸ்க்ருதத்தின் மீது வெறுப்பாக வெளியாவதைக் கேட்டிருக்கிறேன். “சம்ஸ்க்ருதம் செத்த மொழி”, “தமிழில் சாக்கடை கலந்து விட்டது” என்றெல்லாம் பேசிக்கேட்டதால், “வடசொல்”, “தமிழ்”, “சிதைவு” என்று படித்ததும் சற்றே புளியைக் கரைத்தது. அவ்வளவுதான்.
// சாதாரணப் பயன்பாட்டில் சில சொற்கள் கலப்பது இயற்கையே!
இதேதான் நானும் கூற விழைவது. தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பது (குறிப்பாக சம்ஸ்க்ருதம் – ஏனெனில் இரண்டிற்கும் கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது) தமிழை வளப்படுத்தும் என்பது என் கட்சி. இது அளவு மீறக் கூடாதுதான்.
// பல சொற்கள், தமிழை விட்டுக் காணாமலேயே போய் விட்டன:( இதைத் தான் “சிதைவு” -ன்னு குறிப்பிட்டேன்!
இது கண்டிப்பாக சரி செய்ய வேண்டியதுதான். மாற்றுக் கருத்து இல்லை.
//இதை, வடமொழி (எ) செம்மொழி செய்யலை; அது நல்ல மொழி தான்;
அதைச் சார்ந்தவர்கள்/ அந்த மொழியாளர்கள் செய்த கொடுமையே இவை!:(
இந்த வேறுபாட்டைச் சிலர் உணர்வதில்லை. இதுவே மொழி மீது வெறுப்பு உண்டாவதற்குக் காரணம்.
//ஒவ்வொருத்தர் பிடித்தமும் பாத்துப் பாத்து, ஒவ்வொரு சொல்லாச் செதுக்கிச் செதுக்கி நான் எழுத முடியுமா?:))
தேவை இல்லை, கூடவும் கூடாது. அனைவருக்கும் பிடித்ததை எழுதுவது என்று ஏற்பட்டால் எதுவுமே எழுத முடியாது!
(ஒரு சிறு திருத்தம், off topic: “சஹஸ்ர சாகோ உபநிஷத் சமாம்யஹம்” = சஹஸ்ர சாகோபநிஷத் சமாகமம் – ஆயிரம் கிளைகளாகப் பிரிந்த உபநிஷத்துக்களுக்கு சமமானது நம்மாழ்வாரின் தமிழ்ப் பிரபந்தங்கள். இதனால்தான், பெருமாள் புறப்பாட்டில் முதலில் தமிழ் பிரபந்தங்களை சொல்லிக் கொண்டு செல்வார்கள். வேதகோஷம் உற்சவர் பின்னால் வரும். கடவுளே அந்தத் தமிழால் ஈர்க்கப்பட்டு அதன் பின் செல்கிறாராம். அவரைத் தேடிக் கொண்டு வேதங்கள் செல்கின்றனவாம்.)
சரி இத்துடன் இந்த “thread hijacking” வேலையை நிறுத்திக்கொள்கிறேன்.
LikeLike
:)))
இசைந்த புரிதலுக்கு நன்றி கருணா!
You can call me Ravi or KRS, as the hello world calls:)
சமாகமம் = சரியே!
என்னவொரு அழகான சுலோகம்-ல்ல?
பொதுவா இங்கு, அங்குள்ளதைப் புகழ்வாங்க! ஆனா அங்கு, இங்குள்ளதைப் பேசுதல் குறைவு தான்!
அப்படியிருக்க, வடமொழியில், நம்மாழ்வார் போற்றப்படுவதும்/ ஈரத் தமிழை = வேத-உபநிஷத் சமம் -ன்னு சொல்லுறதும், இனிப்பான ஒன்று!
வாழி ஈரத் தமிழ்!
LikeLike
அறிந்து கொண்டேன்… நண்பர்களின் கருத்துக்களும் அருமை…
நன்றி…
LikeLike
சிலுக்குன்னு தலைப்பு வச்சவுடனே எவ்ளோ பேர் வந்திருக்காங்க…. ஆகா ஆகா…
LikeLike
அதானே:) எல்லோரும் சுத்த மோசம்; Only me good boy:)
LikeLike
No doubt about that :-)
amas32
LikeLike
ரவி, நான் அறிந்தவரையிலும் தெரியாது என்பதும் குற்றியலுகரம் தான். இங்கு நெடிலைத் தொடர்ந்து உகரம் வந்தாலும், ஈரெழுத்தல்லாது பல எழுத்துகள் இருப்பதால் இதனை உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்று வகைப்படுத்துவர்.
அதோடு, எனக்கு என்பதும் வன்றொடர்க் குற்றியலுகரம் என்பதால் அதன்பின் வலி மிகும். “எனக்குத்” என்று தகர ஒற்று வரும்.
LikeLike
உன்மை தான் ஐயா!
“எனக்குத் தெரியாது” என்பதே சரி:) ஒற்று மிகும்;
பதிவிலும் அப்படித் தானே இட்டுள்ளேன்?
எனக்கு/தெரியாது என்பதைச் சும்மா ஒரு வேடிக்கையான எடுத்துக்காட்டாக மட்டுமே பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்:)
//தெரியாது என்பதும் குற்றியலுகரம் தான்
இதனை உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்று வகைப்படுத்துவர்.//
இதையே முனைவர் பாண்டியராஜா அவர்களும் சொல்லியிருந்தார்;
ஆனா, எனக்கு ஒரேயொரு இடத்தில் தான் தெளிவில்லை; அதைத் தெளிவிக்க வேண்டுகிறேன்
இந்தத் தமிழ்ப்பல்கலைச் சுட்டியைப் பாருங்களேன் = http://www.tamilvu.org/courses/degree/c021/c0211/html/c0211405.htm
*குறில் எழுத்துகள் மட்டுமே உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தில் வரும்* -ன்னு சொல்லி உள்ளார்கள்; “தெரியாது”-வில் “யா” நெடில் ஆகி விடுகிறதே!
இங்கு தான் தெளிவு தர வேணுமாறு வேண்டுகிறேன்;
LikeLike
தெரியாது – நெடில் தொடர் குற்றியலுகரமா? வேறு எ.கா : தராசு ?
LikeLike
அண்ணா தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் இருக்கு ஆனா புரிஞ்சிக்கிறதுக்கு கடினமாவும் இருக்கு. உங்கள் ஆலோசனை தேவை
LikeLike
தெரியாது – உயிர்த்தொடர் குற்றியலுகரம்
ஈற்றுக்கு முன் உயிர்மெய் குறில் / உயிர்மெய் நெடில் வந்தால் உயிர்த்தொடர் குற்றியலுகரமாகும்.
LikeLike