திறமையில்லாக் கம்பன் திணறல் – ’ஐயோ’!

இன்று Dosa 365 அல்ல! Kamban 52:)

கம்பனை, இலக்கிய உலகிலே, ரொம்ப ஏத்தி விட்டுட்டாங்க -ன்னு, அறிஞர் அண்ணா போன்ற சில தலைவர்கள் குறைபட்டுக் கொள்வதுண்டு:) இளங்கோவையும், சங்கத் தமிழையும்… கம்பன் கவி மறைத்து விட்டதோ? -ன்னு அவிங்களுக்கு ஒரு ஏக்கம்! அவ்ளோ தான்!:)

“ஐயோ”-ன்னு திறமையில்லாமல் திணறும் கம்பன்
= திருமுருக. வாரியார் சொல்கிறார்:)) பார்க்கலாமா இன்னிக்கி? with a podcast?

வெய்யோன் ஒளி, தன் மேனியின்,
விரி சோதியின், மறைய
பொய்யோ எனும், இடையாளொடும்,
இளையானொடும், போனான்!
மையோ, மரகதமோ, மறி,
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு என்பது ஓர்,
அழியா அழகு உடையான்!

தொளை கட்டிய கிளை முட்டிய
சுருதிச் சுவை அமுதின்
கிளை கட்டிய கருவிக் கிளர்
இசையின் பசை நறவின்
விளை கட்டியின் மதுரித்து எழு
கிளவிக் கிளி விழி போல்
களை கட்டவர் தளை விட்டு எறி
குவளைத் தொகை கண்டான்!

அயோத்தியா காண்டம் – கங்கைப் படலம் பாடல்: 2016 & 2020


டபராவில் காபி:

இராகவன்-சீதை; பின்னே இலக்குவன்;
காட்டில் நடந்து செல்கிறார்கள்… மாலைப் பொழுது! அவன் மேனி ஒளி பட்டு, சூரிய ஒளியே  குன்றி விடுகிறது; நாணத்தால் சூரியன் மறைகிறான்!

அப்படி என்ன இராகவன் மேனி எழில்?
= மையோ? மரகதமோ? மறி கடலோ? மழை முகிலோ? ஐயோ!

அப்படி என்ன சீதையின் எழில்?
= புல்லாங்குழல் துளை – இசை அமுதமோ?
= நரம்புள்ள யாழ் – கிளரும் இசையோ?
= ஒழுகும் தேன் – கட்டியாக்கினால் எழும் பேச்சோ?

போகும் பாதையிலே, வயலில் களை பறிக்கிறவங்க, குவளைப் பூ பறிச்சிப் போடுறாங்க;
ஏ குவளைப் பூக்களே, நீங்க எல்லாரும் சீதையின் விழி போல் இருக்கீங்க!


காபி உறிஞ்சல்:

1) சீதைக்கு=இதுவே முதல் காட்டுப் பயணம்!  வழிநடையில் “களைப்பைப் போக்கும் கலிப்பா” = அருமையான துள்ளல் ஓசை!

2) அவன் மேனி ஒளி பட்டு, மாலைச் சூரியன் வெட்கத்தால் மறைகிறான்= கம்பர் அடிச்சி விடுறாரு:) இது என்ன அணி? சொல்லுங்க பார்ப்போம்:)

3) கிளவிக் கிளி = “கிழவிக் கிளி” ன்னு படிச்சிறாதீக, பாவம் சீதை!:)) கிளவி = சொல்/ பேச்சு;

4) குவளைப்பூ போல் விழி -ன்னு சொல்லலாம்!
ஆனா, விழி போல் குவளைப்பூ ன்னு Reverse உவமை! = இது என்ன அணி-ன்னு சொல்லுங்க?:)

5) மையோ? மரகதமோ? மறி கடலோ? மழை முகிலோ? “ஐயோ”
வீட்டுக்குள்ள  “ஐயோ” சொன்னா,  எங்க ஆயா,  விசிறிக் கட்டை-லயே விளாசும்:)
எதுக்கு “ஐயோ” -ன்னு கம்பன் கூவுறான்?
இதுக்கு வாரியார் சொல்லும் குட்டிக்கதை இருக்கு! சொல்லட்டுமா?:) – PODCAST – Sound Cloud



dosa 9/365 Kamban 2/52

Comments
14 Responses to “திறமையில்லாக் கம்பன் திணறல் – ’ஐயோ’!”
  1. amas32 says:

    Clap Clap Clap. Super podcast! Already listening to it a second time now :-)

    amas32

    Like

  2. சொ.வினைதீர்த்தான் says:

    கள்ளிருக்கு மல்ர்க்கூந்தல் பாடல் போல கம்பனில் சில பாடல்கள் என்றும் இனியவை. பொய்யோ எனும் இடையாளொடும், ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகும் அத்தகையது. மையைவிட ஒளிபொருந்திய மரகததையும் ஒலிக்கும் கடலையும் அவற்றுடன் உலகுக்காகும் கருணையும் சொல்லி மேலே சொல்ல முடியாமல் தாங்கமுடியாமல் ஐயோ என்று சொன்னாராம்.
    இன்னொரு எல்லையில் சிறியவர் செய்கையை பொறுக்காமல் சீச்சீ என்ற பாரதியின் ஒலிக்குறிப்பும் நினைவுக்கு வருகிறது.
    தங்களது ஒலிஇணைப்பு எனது மடிகணினியில் சரியாகக் கேட்க முடியவில்லை. உரிய சாதனத்துடன் கேட்கிறேன்.

    மேலும்
    தொளை கட்டிய கிளை முட்டிய
    சுருதிச் சுவை அமுதின்

    கிளவிக் கிளி விழி போல்
    பாடலை அறியத்தந்ததற்கு நன்றி. இதனை யாரும் எடுத்துக்காட்டி நான் முன்பு கேட்டதில்லை. இது போன்ற கம்பன் கவி எத்தனயோ! நன்றி.
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்.

    Like

    • //கள்ளிருக்கும் மல்ர்க்கூந்தல்//
      அருமையான மண்டோதரி-இராவணன் காட்சி அது;

      //தங்களது ஒலிஇணைப்பு எனது மடிகணினியில் சரியாகக் கேட்க முடியவில்லை. உரிய சாதனத்துடன் கேட்கிறேன்//
      கேட்டுட்டுச் சொல்லுங்க! என் குரலைக் கேலி பண்ணக் கூடாது, இப்பவே சொல்லிட்டேன்:) கொஞ்சம் மென்மையாத் தான் ஒலிக்கும், I cant change:)

      //கிளவிக் கிளி விழி போல் பாடலை அறியத்தந்ததற்கு நன்றி.
      இதனை யாரும் எடுத்துக்காட்டி நான் முன்பு கேட்டதில்லை//

      Thanks for noting:) The reason why I gave that:
      1. இராகவன் – சீதை! இருவரும் வர்ணனையில் கூடப் பிரியக் கூடாது;
      முதல் பாட்டில் இராகவன் வர்ணனை மட்டுமே; அதான் இந்தப் பாடலும் சேர்த்துக் குடுத்தேன்:)
      2. இரண்டாம் பாடல் – ல ள மிக்கது… வேகமாச் சொல்லிப் பாருங்க:)

      Like

  3. amas32 says:

    அற்புதமான பாடல். நாலு முறை படித்தவுடன் மனப்பாடமே ஆகிவிட்டது :-) அவ்வளவு எளிமையான அதே சமயம் நல்ல beat உடன் ஆன சொல் நடை.
    //பொய்யோ எனும், இடையாளொடும்,
    இளையானொடும், போனான்!//
    என்ன ஒரு வர்ணனை! என்ன ஒரு சொல்லோவியம்! போன கம்பன் பாடலில் நீங்கள் குறிப்பிட்டது போல //கம்பன் கவியே கவி!//

    ஐயோ என்ற வார்த்தைக்கு நீங்கள் கொடுத்திருக்கம் விளக்கம், ஐயோ அத்தனை சிறப்பு! :-)

    சீதையின் அழகை வர்ணிக்கும் பொழுது //ஏ குவளைப் பூக்களே, நீங்க எல்லாரும் சீதையின் விழி போல் இருக்கீங்க!// என்று கம்பன் சொல்வது, the best!

    ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறேன். சீதை அயோத்தியை விட்டுக் கிளம்பி ஊர் எல்லையைக் கூடத் தாண்டாத பொழுதே காட்டை அடைந்து விட்டோமா என்று இராமனைக் கேட்டாளாம். பாவம் நடந்து நோகாத கால்கள் அவளுக்கு. அப்படிப் பட்டவளை இராமன் காட்டிற்குள் பாதுகாத்து அரவணைத்து அழைத்துச் செல்கிறான்.

    பாடலைச் சொல்லிப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் :-) நன்றி.

    amas32

    Like

    • //ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறேன். சீதை அயோத்தியை விட்டுக் கிளம்பி ஊர் எல்லையைக் கூடத் தாண்டாத பொழுதே காட்டை அடைந்து விட்டோமா என்று இராமனைக் கேட்டாளாம்//

      ஆமா!:)
      “காடு வந்துருச்சா அத்தான்?”:)

      //நல்ல beat உடன் ஆன சொல் நடை//

      ஆமாம்-ம்மா; தமிழில் இசைப் பாக்களை விட இயற் பாக்களே அதிகம்!
      அருணகிரி தான் சந்தத்தின் உச்ச நீதிமன்றம்! அவருக்கு மேல Appeal கிடையாது:)
      அருணகிரிக்கும் முன்பே சந்தத்தில் கலக்கியவர் இருவர்
      * கம்பன்
      * கம்பனுக்கும் முன்னே, திருமழிசை ஆழ்வார்

      கம்பன், போர்க் காட்சிகளில் ஒரே வல்லினமாப் பெய்வான், பல்லு ஒடையும் படிக்கச் சொல்ல:)
      காதலில் மெல்லினமாப் பெய்வான்…
      திருமழிசை ஆழ்வார், திருச்சந்த விருத்தம் -ன்னே நூல்! முழுதும் சந்தம்!

      நடந்த கால்கள் நொந்தவோ, நடுங்கு ஞாலம் ஏனமாய்
      இடந்த மெய் குலுங்கவோ, விலங்கு மால் வரைச்சுரம்
      கடந்த கால் பரந்த கா-விரிக் கரை குடந்தையுள்
      கிடந்த வாறு எழுந் திருந்து பேசு வாழி கேசனே!

      Like

  4. கம்பன் சும்மாவே காட்டுவாரு, திணறேன்ற பேருல double show காட்றாரு. ! Chantham பிரமாதம். . .

    //மையோ, மரகதமோ, மறி,
    கடலோ, மழை முகிலோ//

    நாக்க சொட்ட (நல்ல டிக்காஷன் காபி குடிச்சதுக்கு அப்பறம் பண்ணுவோம்ல.. !) வைக்குறாரு மனுசேன். . .!

    வீராவேசம் மிக்க சந்தங்கள் கும்பகர்ணன் வதை காண்டத்தில் படிச்சுருக்கேன் .( +2 வகுப்பு படிக்கும் மதுரை கம்பன் கழகத்தில் நடந்த பேச்சு போட்டியில் கம்பனின் கும்பகர்ணனை பேசி முதல் பரிசு பாப்பையா கிட்ட வாங்கினேன். . .!) வாய்ப்பு இருந்தால் வரும் வாரங்களில் எப்பவாவது காதல் chantham காட்டிய மாதிரி கலச் chanthamum காட்டுங்க. . .!

    Like

    • //நாக்க சொட்ட (நல்ல டிக்காஷன் காபி குடிச்சதுக்கு அப்பறம் பண்ணுவோம்ல//
      nice comment! nice observation!

      //+2 வகுப்பு படிக்கும் மதுரை கம்பன் கழகத்தில் நடந்த பேச்சு போட்டியில் கம்பனின் கும்பகர்ணனை பேசி முதல் பரிசு பாப்பையா கிட்ட வாங்கினேன்//
      wow, வாழ்த்துக்கள் கண்ணப்பா:)

      //எப்பவாவது காதல் chantham காட்டிய மாதிரி களச் chanthamum காட்டுங்க//
      போட்டுருவோம்!:)
      வாசகர் பதிவும் உண்டு; நீங்க எழுதறீங்களா?:)

      Like

  5. //அவன் மேனி ஒளி பட்டு, மாலைச் சூரியன் வெட்கத்தால் மறைகிறான்// தற்குறிப்பேற்ற அணி – இயல்பான ஒரு செயலை கவிஞர் அடிச்சு விட்டிருக்கார்

    Like

  6. ////விழி போல் குவளைப்பூ /// உருவக அணி?? ஆனால் உருவகத்தில் போல் வாராதே???

    Like

    • //கிளவிக் கிளி விழி போல்
      குவளைத் தொகை கண்டான்//

      * குவளை போல் விழி = உவமை
      * குவளை (போல்) விழி = உவமைத் தொகை
      * விழிக் குவளை = உருவகம்

      ஆனா, இங்கே விழிக்குவளை -ன்னு சொல்லல பாருங்க! விழி போல் குவளை என்கிறார்;
      அதான் “Reverse உவமை” -ன்னு சொல்லி இருந்தேன்:))
      மொத்தம் 24 உவமை அணிகள் உள்ளன, அதில் இது ஒன்னு:)
      = இதுக்குப் பேரு இதர விதர உவமை

      ஒரு பொருள்… ஒரு சமயம் உவமையாகவும், மற்றொரு சமயம் பொருளாகவும் வருமாறு உவமிப்பது!

      Like

  7. psankar says:

    2) tharkuripperra ani – poruzhantheduththa aareyil nedungodi vaaral enbadhu pol mariththuk kaikaatta (silappadhikaram)

    4) uruvagam thavaraagap payanpaduththap pattulladhu enru ezudha vandhen. thanks to you, understood the actual name for it :)

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)